சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.33 நமக்கடிகளாகிய அடிகள்
பண் - கொல்லி
பாறுதாங்கிய காடரோபடு
    தலையரோமலைப் பாவையோர்
கூறுதாங்கிய குழகரோகுழைக்
    காதரோகுறுங் கோட்டிள
ஏறுதாங்கிய கொடியரோசுடு
    பொடியரோஇலங் கும்பிறை
ஆறுதாங்கிய சடையரோநமக்
    கடிகளாகிய அடிகளே.
1
இட்டிதாகவந் துரைமினோநுமக்
    கிசையுமாநினைந் தேத்துவீர்
கட்டிவாழ்வது நாகமோசடை
    மேலும்நாறு கரந்தையோ
பட்டியேறுகந் தேறரோபடு
    வெண்டலைப்பலி கொண்டுவந்
தட்டியாளவுங் கிற்பரோநமக்
    கடிகளாகிய அடிகளே.
2
ஒன்றினீர்கள்வந் துரைமினோநுமக்
    கிசையுமாநினைந் தேத்துவீர்
குன்றிபோல்வதோ ருருவரோகுறிப்
    பாகிநீறுகொண் டணிவரோ
இன்றியேயிலர் ஆவரோஅன்றி
    உடையராயிலர் ஆவரோ
அன்றியேமிக அறவரோநமக்
    கடிகளாகிய அடிகளே.
3
தேனையாடுமுக் கண்ணரோமிகச்
    செய்யரோவெள்ளை நீற்றரோ
பானெய்ஆடலும் பயில்வரோதமைப்
    பற்றினார்கட்கு நல்லரோ
மானைமேவிய கண்ணிளான்மலை
    மங்கைநங்கையை அஞ்சவோர்
ஆனையீருரி போர்ப்பரோநமக்
    கடிகளாகிய அடிகளே.
4
கோணல்மாமதி சூடரோகொடு
    கொட்டிகாலர் கழலரோ
வீணைதானவர் கருவியோ
    விடையேறுவேத முதல்வரோ
நாணதாகவோர் நாகங்கொண்டரைக்
    கார்ப்பரோநல மார்தர
ஆணையாகநம் மடிகளோநமக்
    கடிகளாகிய அடிகளே.
5
வந்துசொல்லுமின் மூடனேனுக்கு
    வல்லவாநினைந் தேத்துவீர்
வந்தசாயினை அறிவரோதம்மை
    வாழ்த்தினார்கட்கு நல்லரோ
புந்தியாலுரை கொள்வரோ அன்றிப்
    பொய்யில்மெய்யுரைத் தாள்வரோ
அன்றியேமிக அறவரோநமக்
    கடிகளாகிய அடிகளே.
6
மெய்யென்சொல்லுமின் நமரங்காளுமக்
    கிசையுமாநினைந் தேத்துவீர்
கையிற்சூலம துடையரோகரி
    காடரோகறைக் கண்டரோ
வெய்யபாம்பரை ஆர்ப்பரோவிடை
    ஏறரோகடை தோறுஞ்சென்
றையங்கொள்ளுமவ் வடிகளோநமக்
    கடிகளாகிய அடிகளே.
7
நீடுவாழ்பதி உடையரோஅயன்
    நெடியமாலுக்கு நெடியரோ
பாடுவரையும் உடையரோதமைப்
    பற்றினார்கட்கு நல்லரோ
காடுதானரங் காகவேகைகள்
    எட்டினோடில யம்பட
ஆடுவாரெனப் படுவரோநமக்
    கடிகளாகிய அடிகளே.
8
நமணநந்தியுங் கருமவீரனுந்
    தருமசேனனு மென்றிவர்
குமணமாமலைக் குன்றுபோனின்று
    தங்கள்கூறையொன் றின்றியே
ஞமணஞாஞண ஞாணஞோணமென்
    றோதியாரையு நாணிலா
அமணராற்பழிப் புடையரோநமக்
    கடிகளாகிய அடிகளே.
9
படிசெய்நீர்மையிற் பத்தர்காள்பணிந்
    தேத்தினேன்பணி யீரருள்
வடிவிலான்றிரு நாவலூரன்
    வனப்பகையப்பன் வன்றொண்டன்
செடியனாகிலுந் தீயனாகிலுந்
    தம்மையேமனஞ் சிந்திக்கும்
அடியனூரனை ஆள்வரோநமக்
    கடிகளாகிய அடிகளே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com